Friday, March 29, 2024
Home » மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக காங்கிரசை விமர்சிக்கும் அண்ணாமலை பாஜவை விமர்சிப்பாரா?: கே.எஸ்.அழகிரி கேள்வி

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக காங்கிரசை விமர்சிக்கும் அண்ணாமலை பாஜவை விமர்சிப்பாரா?: கே.எஸ்.அழகிரி கேள்வி

by Francis

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியதற்கு தேவை இல்லாமல் பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரசை சீண்டி பார்க்கிறார். மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் கர்நாடக முதல்வராக இருந்தபோது மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரம் காட்டினார்கள். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட விரைவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு ஒன்றிய நீர்வள ஆணையம் ஜூன் 2017ல் அனுமதி அளித்தது.

நவம்பர் 22, 2018ல் கர்நாடக அரசு தயாரித்த திட்ட அறிக்கையை கொள்கை அளவில் ஏற்று கொள்வதாக ஒன்றிய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. ஒன்றிய பாஜ அரசின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்ட பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, 2019 நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தோடு ஒன்றிய பாஜ அரசு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இத்தகைய நடவடிக்கையை எடுத்தது என்பதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா? இதைவிட இரட்டை வேடம் வேறு என்ன இருக்க முடியும்?. கடந்த 2021 முதல் 2023 வரை முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை ஆட்சி காலத்தில் 2022-23ம் நிதியாண்டில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அப்போது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கிய பாஜ அரசை எதிர்த்து அண்ணாமலை என்ன செய்து கொண்டிருந்தார்? இதை எதிர்த்து குரல் எழுப்பினாரா? இப்போது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவேன் என்று சொல்கிற அண்ணாமலை, அன்று வாய்மூடி மவுனியாக இருந்து விட்டு, இப்போது வீரவசனம் பேசுவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும். தமிழ்நாடு காங்கிரசை பொறுத்தவரை நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாதகமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரின் அளவிற்கு பாதிப்பு ஏற்படுகிற வகையில் மேகதாதுவில் அணை கட்டப்படுவதை கடுமையாக எதிர்க்கிறோம். கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக ஒரே குரலாக பேசுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில், தமிழக அரசு எடுக்கிற முடிவுகளுக்கு எதிராக அதிமுகவும், பாஜவும் பேசி வருவது கர்நாடகத்திற்கு சாதகமாகவே கருதப்படும். தமிழ்நாடு காங்கிரசை விமர்சிக்கிற அண்ணாமலை கர்நாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருக்கிற பாஜவை விமர்சிப்பாரா? ஆனால், தமிழ்நாடு காங்கிரசை பொறுத்தவரை கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டின் நலனை காப்பதற்காக தமிழக அரசு எடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம். பாஜவை வளர்ப்பதற்காக அரைவேக்காட்டுத்தனமாக ஊடக வெளிச்சம் பெறுவதற்காக அற்பத்தனமான கருத்துகளை அண்ணாமலை கூறி வருகிறார். இதன்மூலம் மலிவான அரசியல் நடத்தி, தமிழ்நாட்டில் பாஜவை வளர்க்கலாம் என்ற அண்ணாமலையின் எண்ணம் பகல் கனவாகத்தான் முடியும்.

You may also like

Leave a Comment

nine + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi