நாகர்கோவில்: அவதூறாக பேசிய பாஜ தலைவர் அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கூறினார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது குளச்சல் தொகுதி வில்லுக்குறியில் பேசியபோது காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் குறித்து அவதூறு பேசியுள்ளார்.
இது தொடர்பாக பிரின்ஸ் எம்எல்ஏ இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் ‘ஆகஸ்ட் 17ம் தேதி அன்று வில்லுக்குறி சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் எனது நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார்.
நான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தரை கைவசப்படுத்தி பல அரசு பணிகளை முறைகேடாக செய்து பணம் சம்பாதித்ததாக அவதூறு பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரின்ஸ் எம்எல்ஏ கூறுகையில், போலீசார் வழக்குபதிவு செய்யாவிட்டாலும் நீதிமன்றம் மூலம் அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும். அவர் நீதிமன்றத்தில் கூற வேண்டியதை கூறட்டும். நான் இதனை விடப்போவதில்லை என்றார்.