Wednesday, June 25, 2025
Home செய்திகள்Banner News 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம்.. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு

11 குற்றச்சாட்டுகள் நிரூபணம்.. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு

by Porselvi

சென்னை : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அண்ணா பல்கலை. வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 ம் தேதி பல்கலை. மாணவி ஒருவர் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஞானசேகரனை கடந்த டிசம்பர் 25ம் தேதி கைது செய்தனர். விசாரணையை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி டிச.28ல் ஐகோர்ட் ஆணை பிறப்பித்தது. பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல் உள்பட 12 பிரிவுகளில் ஞானசேகரன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

ஜனவரி 5ல் ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். பிப்.24ல் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலானாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஏப்.23ல் சாட்சி விசாரணை தொடங்கியது; தினந்தோறும் விசாரணை நடந்தது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் 75 சான்று ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தது காவல்துறை. கடந்த 20ம் தேதி விசாரணை நிறைவடைந்த பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஐந்தே மாதத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இன்று காலை ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராஜலக்ஷ்மி, “சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது.அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளியாக அறிவிக்கிறோம். ஜூன் 2ல் ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.அதே சமயம், “எனக்கு வயதான, உடல்நலன் சரி இல்லாத தாயார் உள்ளார். அப்பா இல்லை. குடும்ப சூழலை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என ஞானசேகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi