கோவை: அண்ணா குறித்து பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். தமிழகத்தில் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: என்னை பொறுத்தவரைக்கும் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை. தமிழக பாஜவுக்கும் பிரச்னை உள்ளதா? என்றால் இல்லை. எந்த பிரச்னையும் இல்லை. அதில் தெளிவாக இருக்கிறோம். அதிமுக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா? இருக்கலாம். அது எனக்கு தெரியாது. ஏன்னா அவர்கள் பேச்சை வைத்து நான் சொல்றேன்.
எனக்கு யாருடனும் பிரச்னை இல்லை. பாஜவை பொறுத்தவரை நாங்கள் மோடி கட்சி. மோடி எங்கள் தலைவர். மோடியை முன்னிலைப்படுத்தி 3வது முறையாக தேர்தலில் நிற்கிறோம். இந்த கூட்டணியின் மையப்புள்ளி மோடி. மோடியை யாரெல்லாம் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் இந்த கூட்டணியில் இருக்கிறார்கள். என்டிஏவுடைய கோடே மோடிதான். அதை அதிமுகவினர் ஏற்றுக்கொள்கிறார்களா? ஏற்றுக்கொள்கிறார்கள்.இன்னைக்கு (நேற்று) செல்லூர் ராஜூ சொல்லியிருக்கிறார். மத்தியில் பிரதமராக மோடியும், மாநிலத்தில் எடப்பாடியையும் பாஜ அறிவிக்க வேண்டும் என்று.
இதை எப்படி ஏற்க முடியும். இதை தேசிய தலைவர்கள்தான் சொல்லணும். நான் யாரையும், எங்கேயும் தவறாக பேசவில்லை. என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கும்போது நான் பதில் பேசுவேன். நாளைக்கு காலையும் பேசுவேன். நாளை மறுநாளும் பேசுவேன். அடுத்தவாரமும் பேசுவேன். தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்வதற்கு நான் வரவில்லை. எனது தன்மானத்தை கேள்விக்குறியாக்கும்போது பதில் சொல்வது எனது கடமை மட்டுமல்ல. எனது உரிமையாக பார்க்கிறேன்.
செல்லூர் ராஜூ கேட்கிற கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும். நான் சொல்ல முடியாது. அதற்கு தேசிய தலைமையோ, தேசிய தலைவரோ சொல்லனும். அதிமுக மூத்த தலைவர்கள் இரண்டு மூன்று நாட்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அதற்கு என்டிஏ மீட்டிங் இருக்கு. எடப்பாடி போகிறார். பிரதமர் இருக்கிறார். எங்களது தேசிய தலைவர் இருக்கிறார். அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே வேறு வேறு ஐடியாலஜியில் உள்ளவர்கள். எனவே முட்டல் மோதல் வருவது சகஜம்.
யாரும் யாருடைய காலிலும் விழ வேண்டியதில்லை. அந்தந்த கட்சிகள் தனித்தன்மையோடு நிற்க வேண்டும். அறிஞர் அண்ணா அவர்களை எங்கேயும் தரை குறைவாக நான் விமர்சித்தது கிடையாது.அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. நான் பேசியது தவறு என கூற முடியாது.
தமிழகத்தில் பாஜ ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் தலைவராக இருக்கிறேன். அதை சொல்லித்தான் நான் வந்தேன். எனவே இயற்கையாக சில முட்டல் மோதல்கள், சில இடங்களில் பேச்சுகள் வருவது சகஜம்தான். அதை பெர்சனலாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அதிமுகவினர் எதிர்க்கிறார்கள் என்பதால் இறங்கிலாம் போக முடியாது. சனாதனத்தை தர்மத்ததை எப்படி பாஜ மக்களிடம் மக்களிடம் ஆக்ரோஷமாக பேசுதோ, அதை அதிமுக பேச வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. அது அவர்கள் கொள்கை. அவர்கள் முடிவு. அவர்கள் சரித்திரம். அவர்கள் சனாதனத்தை வேறு மாதிரி பேசுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.