ஆவடி: கொரட்டூர் பகுதியில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நேற்று கொரட்டூர் ரயில் நிலைய பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில், அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் காவலர்கள் என்.ஆர்.எஸ்.ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, சுமார் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து நடத்திய விசாரணையில், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த கலாவதி(63), அயனாவரம் பகுதியை சேர்ந்த ராணி(59) மற்றும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(23) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. பின்னர், விசாரணை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.