சென்னை: பாமகவில் ராமதாஸ், அன்புமணி மோதல் உச்சக்கட்டத்தில் இருந்து வரும் வேளையில், சென்னையில் ராமதாசை அன்புமணி மகள்கள் திடீரென சந்தித்து பேசினர். இதனால் மகள்கள் மூலம் அன்புமணி சமாதானம் பேச தூது விட்டாரா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது. பாமகவில் தந்தை-மகனுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். தொடர்ந்து, இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ‘என் மூச்சு உள்ள வரை நான் தான் பாமக தலைவர்’ என்றும், ‘அன்புமணியை பார்த்தாலே பிபி எகிறுகிறது’ என்றும் கூறினார். இதனை தொடர்ந்து, பா.ம.க. மாவட்ட பொதுக்குழுவில் அன்புமணி பேசுகையில், ‘மருத்துவர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகளுக்கு மேல், மன நிம்மதியுடன், நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியோடு வாழவேண்டும். ஒரு மகனாக அது என்னுடைய கடைமையும் கூட. என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள்’ என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் நேற்று முன்தினம் சென்னை வந்தார். சென்னையில் பேட்டியளித்த ராமதாஸ், ‘மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோரை தொடர்பு கேட்டு கொண்டு தான் இருக்கிறேன். ரத்தம் மற்றும் மற்ற செக்கப் பண்ணி கொண்டு தான் இருக்கிறார்கள். நான் பாலோ பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன்’ என்று மட்டும் கூறினார். அதே நேரத்தில் தந்தையிடம் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் என்ன கட்டளையிட்டாலும் தலைவராக நான் ஏற்க தயார் என்று அன்புமணி கூறியுள்ளார். நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இதுவே போதும் என்று நினைக்கிறீர்களா?. என்று ராமதாசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், அதற்கான முடிவு போக, போக தெரியும் என்ற பாடி விட்டு சென்றார்.
இந்நிலையில் அன்புமணியின் மகள்கள் சென்னையில் தங்கியுள்ள ராமதாசை சந்திப்பதற்காக வந்தனர். அங்கு தாத்தா ராமதாஸை சந்தித்து பேசினர். ராமதாசுடன் அன்புமணி மகள்கள் சந்திப்பு தற்போது பேசும் பொருளாகியுள்ளது. அன்புமணி விவகாரத்தில், ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதால், சமாதானம் செய்யும் வகையில் மகள்களை அன்புமணி தூது அனுப்பி வைத்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பேட்டியளித்த ராமதாஸ், ‘என் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிக்கோ, அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறினேன். ஆனால் இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும். என்னிடம் கெஞ்சி கூத்தாடி வாதாடி தர்மபுரியில் சவுமியா போட்டியிட்டார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வேண்டாம் என்று கூறியதற்கு எதிர்மாறாக அன்புமணி செயல்பட்டார்’ என்று குற்றம்சாட்டியிருந்தார். பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் அன்புமணியின் மகள்களும் பங்கேற்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலானது. இதுவும் ராமதாசுக்கு பிடிக்கவில்ைல என்று கூறப்படுகிறது. தற்போது அன்புமணி மகள்கள், ராமதாசை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.