திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் பழனிவேல்ராஜன் (50). திருப்புவனம் ஒன்றிய அமமுக துணைச்செயலாளர். இவர் மானாமதுரை அருகே உள்ள ஒரு ஊரில் ஜெராக்ஸ் மற்றும் பால் பாக்கெட் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். கடந்த 30ம் தேதி 8ம் வகுப்பு மாணவி ஒருவர் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வந்தார். அப்போது பழனிவேல்ராஜன், மாணவியை ஏமாற்றி கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவி அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் திரண்டு வந்து கடையில் இருந்த பழனிவேல்ராஜனை தாக்கியதுடன், மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் பழனிவேல்ராஜன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் அவரை நேற்று கைது செய்தனர்.