அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பிளாஸ்டிக், பாலித்தீன் பேக்கிங் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏராளமான மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகின. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில், காமாக்ஷி மேலிபேக் பிரைவேட் லிமிடெட் என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வகையான பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்ட பேக்கிங் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அருகில் வைக்கபட்டிருந்த கெமிக்கல் பேரல் பகுதியில் பரவியதால் தீ அதிவேகமாக பற்றி எரிய துவங்கியது. தகவலறிந்து உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை, செங்குன்றம், தண்டையார்பேட்டை, ஜே.ஜே.நகர், ஆவடி, மாதவரம், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
இதில் கெமிக்கல் பேரல்கள் வைக்கப்பட்ட கிடங்கு வெடித்து சிதறியதால் அருகில் சென்று தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் சிரமப்பட்டனர். மேலும் சென்னையில் இருந்து ரோபோ ஸ்கைப் லிப்ட் அதிநவீன இயந்திரங்களுடன், விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால், தொழிற்சாலை அருகில் அதிநவீன உயர்மின் கோபுரம் இருப்பதால், பாதுகாப்புக்காக சுமார் ஆறு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீவிபத்தின்போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் அங்கிருந்த மூலப் பொருட்கள், ஏற்றுமதிக்கு தயாரான உற்பத்தி பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும், சுற்றுப்பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் பிரியா நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் தொழிற்சாலையில், தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா என விரிவான ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.