Friday, July 18, 2025
Home செய்திகள்குற்றம் தூக்கத்திலேயே இறந்ததாக 3 மாதம் நாடகமாடியது அம்பலம் சிங்கப்பூர் காதலன் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: சிறுவன் உட்பட 6 பேர் கைது

தூக்கத்திலேயே இறந்ததாக 3 மாதம் நாடகமாடியது அம்பலம் சிங்கப்பூர் காதலன் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: சிறுவன் உட்பட 6 பேர் கைது

by Francis

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி, நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் விஜயன்(29), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா(25). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 17ம் தேதி இரவு வீட்டில் தூங்கிய நிலையிலேயே விஜயன் இறந்துவிட்டதாக, அவரது மனைவி வெண்ணிலா உறவினர்களுக்கு தெரிவித்தார். விஜயன் சாவில் சந்தேகமடைந்த உறவினர்கள், திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜயனின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாரிடம் வழங்கப்பட்டது. அதில் விஜயனின் கழுத்து நெரிக்கப்பட்டும், மூச்சு திணறடிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் வெண்ணிலாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். இதில் வெண்ணிலா சிங்கப்பூரில் உள்ள அவரது காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: விஜயனின் மனைவி வெண்ணிலாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்(20) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து அடிக்கடி செல்போனில் பேசியுள்ளனர். இதற்கிடையில் சஞ்சய் கடந்த பிப்ரவரி மாதம் சிங்கப்பூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். தொடர்ந்து வெண்ணிலா அவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த விஜயன் மனைவியை கண்டித்துள்ளார். இதுபற்றி சிங்கப்பூர் காதலன் சஞ்சயிடம், கணவர் தகராறில் ஈடுபடுவதாக கூறி வெண்ணிலா அழுதுள்ளார். இதனால் அவரை கொலை செய்ய வெண்ணிலா, சஞ்சய் ஆகியோர் திட்டம் தீட்டி உள்ளனர்.
அதன்படி சஞ்சய் தனது நண்பர்களான சக்திவேல்(23), நந்தகுமார்(19), நாட்றம்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அழகிரி(19), சபரி வாசன்(19), 17 வயது சிறுவன் ஆகியோர் மூலம் வெண்ணிலாவின் கணவர் விஜயனை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி கடந்த மார்ச் 17ம் தேதி இரவு 5 பேரும் விஜயன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே தயாராக இருந்த வெண்ணிலா கதவை திறந்து அவர்களை உள்ளே அழைத்து சென்றுள்ளார். பின்னர் வெண்ணிலா உட்பட 6 பேரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த விஜயனின் கை, கால்களை இறுக்க பிடித்துக்கொண்டு கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து 5 பேரும் தப்பிவிட்டனர். மறுநாள் வெண்ணிலா உறவினர்களுக்கு போன் செய்து கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். பின்னர் விசாரணையில் உண்மைகள் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் வெண்ணிலா, சஞ்சய்யின் நண்பர்களான சிறுவன் உட்பட 6 பேரை நேற்று கைது செய்தனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi