சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு இந்தியாவின் பல நகரங்களை தாக்குவதற்கு பாகிஸ்தான் முற்பட்ட நிலையில் அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் ராணுவ படைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரே தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது.
இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேசமயத்தில், எளியோர்களுக்கான ரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நல செயல்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமக்காக எல்லையில் போர் புரியும் நம் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.