திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமை, விழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்
சென்னை: திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் முழுவதும் அனைத்து நாட்களிலும், பார்த்தசாரதி சுவாமி தேரோட்டம், நரசிம்மர் சுவாமி தேரோட்டம், மாசிமகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 82 நாட்களில் வடை, பாயசத்துடன் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஆண்டொன்றுக்கு கோயிலுக்கு வருகை தரும் 82,000 பக்தர்கள் பயன்பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் மதன்மோகன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தர், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, மாமன்ற ஆளும்கட்சி துணைத்தலைவர் காமராஜ் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


