சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் டெர்மினல் 1ல் இருந்து புறப்படும் விமானங்கள் டெர்மினல் 4ல் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது முனையம் என்ற டெர்மினல் 3, புதிதாக கட்டும் பணி மற்றும் விமான பரப்பில் விரிவாக்க பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் டெர்மினல் ஒன்று புறப்பாடு பகுதியில், பயணிகள் நெரிசலை குறைக்கவும், விமான போக்குவரத்து நெரிசல்களை முறைப்படுத்தவும் இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்று (ஜூன் 1) முதல் சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படக்கூடிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் சென்னை உள்நாட்டு முனையம், டெர்மினல் நான்கில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் இருந்து இந்த புதிய திட்டம் சென்னை விமான நிலையத்தில் அமலுக்கு வருகிறது.
அதே நேரத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பெரிய ரக விமானங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு நகர்களுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல், சென்னை உள்நாட்டு விமான முனையம் டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்பட்டு செல்லும். அதே சமயம், இண்டிகோ ஏர்லைன்ஸ் வருகை விமானங்கள் ஏடிஆர் ரக சிறிய விமானங்கள், பெரிய விமானங்கள் அனைத்தும் உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றில் வழக்கம் போல் வந்து தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.