மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் ஆலயம் உள்ளது. இத்திருத்தளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மாதந்தோறும் அம்மாவாசை தினத்தன்று நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் ஏராளமானனோர் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது மிக சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.
இந்நிலையில் நேற்று ஐப்பசி மாத அமாவாசை தினம் என்பதால் அதிகாலை மூலவர் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மகாதீபரனையும் காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்திற்கு அம்மனை மேள தாளங்கள் முழங்க பூசாரிகள் ஊஞ்சல் மேடைக்கு அம்மனை தோளில் சுமந்து வந்து ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடிய போது எதிரே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் கைகளில் தீபம் ஏந்தி அம்மனை உருகி வேண்டினர்.


