சென்னை: ‘‘அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிட வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பி.தர்மராஜ், எம். கோவிந்தராசு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2014ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 746 ஓட்டுநர்கள், 610 நடத்துநர்கள், 261 இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்கள், 13 இளநிலை பொறியாளர்கள், 40 உதவிப் பொறியாளர்கள் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
அதில், உதவிப் பொறியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பித்தோம். தேர்வு நடைமுறையில், பிஇ படிப்பில் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற அசல் மதிப்பெண்கள் ஆகியவற்றை குறைத்து காண்பித்து எங்களை தேர்வு செய்யவில்லை. எனவே, அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் மேற்கூறிய பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களின் பணி நியமனத்தை செல்லாது என்று அறிவித்து அவர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.
இந்தப் பதவிகளுக்கு நாங்கள் பெற்ற அசல் மதிப்பெண்களை கருத்தில் கொண்டு எங்களை இந்த பதவிகளுக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு ஐகோர்ட்டில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.