தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும், அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என்று தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழிபாடு மேற்கொண்டார். பின்னர் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவர் அளித்த பேட்டி: ‘‘கோவை சரக டிஐஜி விஜயகுமார் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு முக்கியப் பணி வழங்கியது சரியானதல்ல. அவருக்கு நல்ல ஓய்வு அளித்திருக்க வேண்டும். வீட்டிலும், பணியிலும் அவருக்கு மனஅழுத்தம் இல்லை என காவல்துறை உயரதிகாரிகள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் எதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து உரிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாநிலம் முழுவதும் தொடர்ந்து பணியாற்றும் காவலர்களுக்கு உரிய ஓய்வளித்து தீராத மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு பல நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எவ்வாறு அமல்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் நாட்கள் உள்ளன.
அதுகுறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். எங்களிடம் மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. அதிமுக யாருக்கும் அடிமையில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அதற்கான அடிப்படை பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தற்போது 1.60 கோடி பேர் அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர். வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் மிகப்பெரிய அளவில் எழுச்சி மாநாடு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* விமான நிலையத்தில் அதிமுகவினர் கைகலப்பு
எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் வந்திருந்தனர். சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்த சீனிராஜ் ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்கள் அவரிடம் ‘’கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நீ எப்படி மாவட்ட செயலாளர் படத்துடன் விளம்பரம் செய்யலாம்’’ என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்புடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.