Friday, June 20, 2025
Home செய்திகள் ஐதராபாத் தொழிலதிபர் கொடுத்த புகாரில் அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் மீது மேலும் ரூ.2.11 கோடி மோசடி வழக்கு பதிவு

ஐதராபாத் தொழிலதிபர் கொடுத்த புகாரில் அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் மீது மேலும் ரூ.2.11 கோடி மோசடி வழக்கு பதிவு

by Neethimaan

* 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
* வாட்ஸ்அப் குழு அமைத்து ரவுடிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து

சென்னை: ஐதராபாத் தொழிலதிபரிடம் ரூ.2.11 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை பனையூர் பகுதியை சேர்ந்தவர் அஜய் வாண்டையார் (36). நடிகரான இவர், பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். நடிகர் கருணாஸ் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக பணியாற்றி வந்த அஜய் வாண்டையார், கருணாசுடன் ஏற்பட்ட தகராறில், அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த ஜனவரி 28ம் தேதி ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதே நேரம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியான சுனாமி சேதுபதியுடன் இணைந்து சென்னையில் தொழிலதிபர்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதை உறுதி செய்யும் வகையில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பாரில் கடந்த 22ம் தேதி தூண்டில் என்ற உணவகம் நடத்தி வரும் இசிஆர் ராஜா என்பவருக்கும் செல்வபாரதி என்பவருக்கும் இடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ராஜாவை செல்வபாரதி பாட்டிலால் அடித்து காயப்படுத்தினார். இதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் தனியார் பார் சூறையாடப்பட்டது. இதையடுத்து, தனியார் பார் மேலாளர் சம்பவம் குறித்து வீடியோ பதிவுகளுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தூண்டில் உணவகம் நடத்தி வரும் ராஜாவுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகியான அஜய் வாண்டையார் தனது கூட்டாளியான ரவுடி சுனாமி சேதுபதியுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று, இன்ஸ்பெக்டரிடம் ராஜாவை விடுவிக்க கோரி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்.

இதனால் அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி மீது நுங்கம்பாக்கம் போலீசார் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அஜய் வாண்டையார் தனது கூட்டாளியுடன் தேனியில் தலைமறைவானார். பிறகு நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதியை தேனியில் வைத்து கைது செய்தனர். பிறகு அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதியின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது, அதில், இருவரும் சேர்ந்து ‘பாண்டவாஸ் அணி’ என்ற தலைப்பில் வாட்ஸ் அப் குழு ஒன்று தொடங்கி நடத்தி வந்ததும், அந்த குழுவில் தமிழகத்தில் உள்ள பிரபல கூலிப்படையினர், ரவுடிகள் மற்றும் அஜய் வாண்டையாரின் ஆதரவாளர்கள் பலர் இருந்ததும் தெரியவந்தது.

அந்த வாட்ஸ் அப் குழு மூலம் சென்னை, தஞ்சை, தேனி, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி என தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு தொழிலதிபர்கள் பலரை மிரட்டி பல கோடி ரூபாய் பறித்ததும், தமிழகத்தில் உள்ள பல கூலிப்படையினருக்கு தூண்டில் ராஜா மூலம் அடைக்கலம் கொடுத்து வந்ததும் தெரியவந்தது. நெல்லையில் கொலையில் ஈடுபடும் கூலிப்படையினர் சென்னையில் தூண்டில் ரெஸ்டாரண்டுக்கு வந்து தங்குவார்கள். ராஜா மற்றும் அஜய் வாண்டையார் மூலம் சில போலீஸ் அதிகாரிகளை பிடித்து, யாரையாவது போலீசில் சரண் அடைவார்கள். போலீசார் அவர்களை கைது செய்ததுபோல கணக்கு காட்டுவார்கள். இதனால் உண்மையான கூலிப்படையினர் தப்பி வந்தனர். இதனால்தான் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் தொடர் கொலைகள் நடந்தாலும் போலீசாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று உளவுத்துறை போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில், அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, அவரால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் பலர் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் பரத்குமார் என்பவர், தனது தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்வதாக ரூ.2.11 கோடி பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும், பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்திய போது அஜய் வாண்டையார் தனது ரவுடி நண்பர்களுடன் சேர்ந்து ஐதராபாத் தொழிலதிபரை மிரட்டி ரூ.2.11 கோடி பணம் பெற்று மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த மோசடி பின்னணியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் இருப்பதாக விசாரணையின் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே அவர்களை ைகது செய்யும் வகையில் சிறையில் உள்ள அஜய் வாண்டையாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அஜய் வாண்டையார் அடிதடி மற்றும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவருடன் தொழில் ரீதியாகவும், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்ட பிரபல அரசியல் கட்சி நடத்தி வரும் நடிகர் உள்பட பலர் கலக்கத்தில் உள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi