சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பெரும்பாலும் எடப்படிக்கே சாதகமாக உள்ளது. அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் என்றதால், ஏற்கனவே அதிமுகவை கைப்பற்ற முயன்று தோற்றுப்போன டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டார்.
இதற்காக டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசினர். இதனால் அவர்கள் விரைவில் சசிகலாவையும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஓபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமாகிய எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 13.06.2023 – செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.