Friday, April 19, 2024
Home » ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு: அதிமுக தலைமையில் கூட்டணி

ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு: அதிமுக தலைமையில் கூட்டணி

by Ranjith

சென்னை: அதிமுக சார்பில், ஆகஸ்ட் 20ம் தேதியன்று மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.

இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கட்சி சார்பில் மறைந்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தின் வாயிலாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, அதிமுக – பாஜ இடையேயான நிலவும் மோதல்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டன. மேலும், 15 தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

  • அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு செயற்குழு சார்பில் வாழ்த்துகள், பாராட்டுகள்.
  • அதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும்.
  • கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பிக்கும் பணியிலும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணியிலும் நிர்வாகிகள் முனைப்போடு ஈடுபட வேண்டும்.
  • நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலையொட்டி அதிமுக சார்பில் அனைத்து தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் அடங்கிய பூத் கமிட்டிகளை விரைந்து அமைக்க வேண்டும்.
  • புதிய அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
  • காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறவும், அதற்கடுத்து வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற களப்பணி ஆற்ற வேண்டும் என்பன உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ்மகன் உசேனுக்கு கார் பரிசு: அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா ஸ்கார்பியோ காரை பரிசாக அளித்தார். பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இபிஎஸ் வழங்கும் மிகப்பெரிய பரிசு இதுவாகும்.

You may also like

Leave a Comment

seventeen − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi