திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் நகர் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று புதுப்பட்டி பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றுள்ளனர்.
அப்போது புதுப்பட்டி அரசு பள்ளியின் பின்புறம் உள்ள முனியாண்டி கோயில் பகுதியில் ஒரு வாலிபர் கஞ்சா பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் திருப்புத்தூர் அய்யாதுரை சந்து பகுதியைச் சேர்ந்த அதிமுக நகர செயலாளர் இப்ராம்சா மகன் முகமது இஷாஸ் (22) என்பதும், இவர் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.