சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான விதிகளை திருத்தவோ, ரத்துசெய்யவோ கூடாது என்பது நிரந்தர விதியாகும். எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டி அந்த விதிகளை திருத்தியுள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என விதியை திருத்தியுள்ளார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு 2016-ல் ரூ.3.26 கோடி ஒதுக்கப்பட்டது. திட்டத்துக்கு அஸ்திவாரம் அமைத்தது ஜெயலலிதாதான். அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். காலத்திலேயே மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் செங்கோட்டையன். பல்வேறு விமர்சனங்களுக்கு அதிமுகவில் இருக்கும் செங்கோட்டையன்தான் பதில் கூற வேண்டும். கட்சிக்கு விசுவாசமானவர் செங்கோட்டையன் அவர் மீது எந்த அதிருப்தியும் இல்லை. கட்சி ஒன்றாக இயங்க வேண்டும் என்று விரும்புபவர் செங்கோட்டையன். கட்சி ஒன்றிணைய வேண்டும் என்றுதான் நானும் சசிகலா, டி.டி.வி. உள்பட அனைவரும் கூறி வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி. என்னை எதிர்க்க 6 பன்னீர்செல்வத்தை களமிறக்கியவர் ஆர்.பி.உதயகுமார் என ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு. ஆர்.பி.உதயகுமாரின் பேச்சை நான் ஒரு பொருட்டாக கருதவில்லை. அதிமுக ஒன்று சேர வாய்ப்பிருப்பதாக தொண்டர்கள் கருதுகின்றனர். அதிமுக ஒன்று சேர எந்த நிபந்தனையும் நான் விதிக்க மாட்டேன். கட்சி ஒன்றுசேர சசிகலா, டி.டி.வி.தினகரனுடன் பேசியுள்ளேன். கட்சி இணைய எவ்வளவோ நான் விட்டுக் கொடுத்துள்ளேன். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று உருவாக்கப் போகிறோம் என்று அன்று சொன்னார்கள், அதற்கும் ஒப்புக்கொண்டேன். அதிமுக ஒன்றிணையாவிட்டால் நான் உள்பட அனைவருக்கும் தாழ்வு. கட்சி ஒன்றிணைய எதற்குமே ஒத்துவரவில்லை எடப்பாடி பழனிசாமி என ஓ.பி.எஸ். கூறினார்.