சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்டா என்பது குறித்து பொறுருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக தலைமையிலான அணியில் தேமுதிக இடம் பெற்றது. அந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு மாநிலங்களவை தொகுதியை அதிமுக தர சம்மதித்ததாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி வந்தார். ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறி வந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களவை உறுப்பினர் பற்றி நாங்கள் ஏதும் சொன்னோமா? யார், யாரோ சொல்வதை எல்லாம் கேட்க வேண்டாம் என்று தெரிவித்தார். இதனால், பிரேமலதா, எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இதனால், வர உள்ள தேர்தலில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி வைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது, அவர், ‘‘தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தரப்படும் என்று அதிமுக சொன்னது உண்மை தான். வெயிட் பண்ணுங்க. இப்போது தான் தேர்தல் தேதியை அறிவித்து இருக்கிறார்கள். டைம் இருக்கிறது. பார்ப்போம். எங்களுடைய மாநாடு ஜனவரி 9ம் ேததி நடக்க இருக்கிறது. அப்போது எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம்’’ என்று கூறினார்.