திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக அம்மாநில மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் அங்கு இந்தி திணிக்கப்படாது மராட்டிய மொழி தான் கட்டாயம் என அம்மாநில பாஜ முதலமைச்சர் பட்னவிஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் மறைமுகமாக இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மதிமுகவில் நிலவிய சில பிரச்னைகளால் எங்களுக்குள் கோபம் இருந்தது.
ஆனால் வைகோவின் மனிதநேயத்திற்கு முன் அந்த கோபம் அடிபணிந்து விட்டது. நான் இன்னும் நிறைய அரசியலை வரக்கூடிய காலங்களில் கற்றுக்கொள்வேன். அதிமுக- பாஜ கூட்டணி தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, அதிமுகவிற்கும் நல்லதல்ல. அதிமுக- பாஜவுடன் கூட்டணி வைத்தது அக்கட்சி தொண்டர்களுக்கே விருப்பமில்லை. எந்த பின்னணியில் அதிமுக பாஜ கூட்டணி உருவானது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கூட்டணி அதிமுகவிற்கும் பிடிக்கவில்லை, மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஒவ்வாத கூட்டணி ஒரு போதும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.