காரைக்குடி: அதிமுக-பாஜ கூட்டணி துப்பாக்கி முனையில் நடந்த கட்டாய திருமணம் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்பி, நேற்று அளித்த பேட்டி: அதிமுக – பாஜவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மை மக்கள், தமிழ் உணர்வு உடையவர்கள் பெரும்பாலானோர் அதிமுகவை ஏற்கவில்லை. அடிமட்ட தொண்டர்களும் ஏற்கவில்லை என்ற காரணத்தால் தான் பிரிந்தார்கள். தற்போது தேர்தல் அரசியலை தாண்டிய கட்டாய காரணங்களுக்காக வலுக்கட்டாயமாக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கிராமப்புற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அதிமுக அடிமட்ட தொண்டர்கள் இக்கூட்டணியை விரும்பாத நிலையை காணமுடிந்தது.
கூட்டணி தொடர்பாக நல்ல அபிப்ராயம் கிடையாது. இது துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாய திருமணம் செய்தது போன்றது. விரும்பி இந்த கூட்டணி வந்தது போல் தெரியவில்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தருணங்களிலும் வெவ்வோறு முரண்பாடுகள் இருகட்சியினருக்குள் வெளிப்படுகிறது. எனவே வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். பாஜ எப்போதும் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பார்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.