Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது : 242 பயணிகளின் நிலை என்ன?

அகமதாபாத் : அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. 12 ஊழியர்கள் உள்பட 242 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் A1171 வகை பயணிகள் விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பகல் 1.17 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து மேகானி நகர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததில் வானுயரத்துக்கு கரும்புகை வெளியேறி வருகிறது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் ரக விமானம் ஆகும்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரியவந்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. மேலும் விபத்துக்குள்ளான பகுதிக்கு 90 பேர் கொண்ட மீட்புப் படை வீரர்கள் விரைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து மாநில முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து குஜராத் மாநில முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.