Wednesday, June 25, 2025
Home செய்திகள் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் திட்டம் துவக்கம் வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

உழவரைத் தேடி வேளாண்மை உழவர் திட்டம் துவக்கம் வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

by Lakshmipathi

* விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நெல்லிக்குப்பம் : உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்திட்டத்தில், வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.நடுவீரப்பட்டு ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நல திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, வேளாண் துறை சார்ந்த கண்காட்சி பொருட்களை பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண் உற்பத்தியை அதிகரித்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 2025-26ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முதல்வரால் காணொலி மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று முகாமிட்டு, உழவர்களின் தேவைகளை அறிந்து லாபம் ஈட்டும் வகையிலான ஆலோசனைகள் வேளாண் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இம்முகாம் 15 நாட்களுக்கு ஒரு முறை 2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமையில் வட்டாரங்களில் உள்ள 2 கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.

இத்திட்டம் மூலம் அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களுடைய வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.இதைதொடர்ந்து விவசாயிகளுக்கு உளுந்து பயிர் மற்றும் விவசாயம் சார்ந்த வேளாண் இடுபொருட்களை வழங்கியதோடு, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில், கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் கதிரேசன், வேளாண் துணை இயக்குனர் பூங்கோதை, கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் பாபு, உதவி இயக்குனர் சுரேஷ், தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயா, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ரமேஷ், தோட்டக்கலை உதவி அலுவலர் பாபு, கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி பூக்கடை ஞானசேகரன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி தொண்டரணி துணை அமைப்பாளர் பாண்டுரங்கன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi