கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மை பிரிவு) ஆகிய இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 30 ஆயிரத்து 333 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைமுறைகள் நேற்று துவங்கியது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேற்று நடந்தன. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது. இதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வரும் 24-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினமே பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடக்கிறது. இந்த பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது. பின்னர், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி நடக்கிறது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் ஜூன் 24ல் வெளியீடு
0