ராமேஸ்வரம்: ஐந்து நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் சிறிய விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதே நேரம் பெரிய விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 27 மீனவர்கள், 5 விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் கடந்த 5 நாட்களாக விசைப்படகுகள் அனைத்தும் கரைநிறுத்தம் செய்யப்பட்டன.
தொடர் போராட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, சிறிய விசைப்படகு மீனவர்கள் மட்டும் போராட்டத்தை நேற்று முன்தினம் இரவு வாபஸ் பெற்றனர். இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு, நேற்று ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் டோக்கன் பெற்று, 100க்கும் மேற்பட்ட சிறிய படகுகளுடன் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்: அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அந்த நாட்டு நீதிமன்றத்தில் வரும் 27ம் தேதி ஆஜர்படுத்தப்படட உள்ளனர்.
அப்போது மீனவர்கள், படகுகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடும் என குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். இல்லாவிட்டால் நவ.3ல் மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 25ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.