துரைப்பாக்கம்: புது பெருங்களத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54). பக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (48), தனியார் பள்ளி ஆசிரியை. இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். அங்கு சம்பாதித்த பணத்தை சேமிப்பாக வைத்திருந்தார். இந்த நிலையில், எங்களுக்கு பழக்கமான பீர்க்கன்காரணை பாஜ பொறுப்பாளர் பழனிவேலன் மற்றும் அவரது மனைவி தேவகி ஆகியோர் எங்களை அணுகி, மருத்துவ தேவைக்கு பணம் தேவை என்று கேட்டனர்.
முதலில், ரூ.25 ஆயிரம், அதன்பிறகு ரூ.2 லட்சம் என இருமுறை, அவரது வங்கி கணக்கில் பணம் அனுப்பினேன். அதேபோல் தொடர்ந்து தேவகி வங்கி கணக்கு மூலமாக, ரூ.20 லட்சம் வரை வாங்கியுள்ளார். அதன்பின் பழனிவேலன் கூறியதின் பேரில், அவரது நண்பர் அமல்ராஜ் என்பவருக்கு ரூ.3 லட்சம், விஜயலட்சுமி என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம், கணேசன் என்பவருக்கு ரூ.4.50 லட்சம் கொடுத்தேன். அந்த வகையில், ரூ.80 லட்சம் வரை பழனிவேலனுக்கும், அவர் சார்ந்த நபர்களுக்கும் கொடுத்துள்ளேன். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய பணத்தை அவர் திருப்பித் தரவில்லை.
நெடுங்குன்றத்தில் எங்களுக்கு சொந்தமான இடத்தையும் பழனிவேலன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். நானும், எனது கணவரும் பணத்தை திருப்பி கேட்க, பழனிவேலனின் பாஜ அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு, அமல்ராஜ் உள்ளிட்டவர்கள் மூலம் ஆபாசமாக மிரட்டி, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள், பணம் கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுக்கிறார். ரவுடிகள் பெயரை கூறி மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.