‘ஒன் டூ ஒன்’ மூலம் நிர்வாகிகளுடன் சந்திப்பு நெல்லை தொகுதியில் தோற்றால் நிர்வாகிகள் பதவிகள் பறிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
சென்னை: திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ‘ஒன் டூ ஒன்’ மூலம் சந்தித்து பேசினார். அப்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தோற்றால் மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்தார். திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.
இதுவரை 73 சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தொகுதிகளில் சரிவர செயல்படாத நிர்வாகிகளின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு அவர்களை கடுமையாக எச்சரித்து வருகிறார். இனிமேலும் இதுபோன்று செயல்பட்டால் பதவிகளை பறிக்கவும் தயக்க மாட்டேன் என்றும் கூறி வருகிறார். அதேபோன்று நடவடிக்கையும் எடுத்து வருகிறார். அதே நேரத்தில் ஒழுங்காக பணியாற்றும் நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி வருகிறார்.
ஒழுங்காக பணியாற்றினால் பதவிகள் தேடி வரும் என்றும் அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ‘ஒன் டூ ஒன்’ மூலம் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இதில், தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தெற்கு மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்பி உடனிருந்தார். நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதி வெற்றி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற வேண்டும் என்று அப்போது அறிவுறுத்தினார்.
எஸ்ஐஆர் பணிகளில் உள்ள குழப்பங்களினால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் சந்திப்பின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதாவது, வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறவில்லை என்றால் மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும். எனவே, தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் தற்போது தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


