பிரயாக்ராஜ்: முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை சுட்டு கொன்ற சம்பவத்தில் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உமேஷ் பால் கடத்தல் வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் எம்பியும் பிரபல தாதாவுமான ஆதிக் அகமதுவுக்கு பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று, ஆதிக் அகமது(60 ) மற்றும் அவரது சகோதரர் அஷ்ராப் ஆகியோர் பிரயாக்ராஜ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றபோது இருவரையும் டிவி நிருபர்கள் வேடத்தில் வந்திருந்த 3 பேர் சுட்டுக் கொன்றனர். பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார், ஆதிக் சுடப்படுவதை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. போலீசார் கையில் இயந்திர துப்பாக்கிகள் இருந்தபோதும், பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆதிக் அகமது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது உ.பி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில், சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பிறகு பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி ஷாகன்ஜ் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி உட்பட 5 பேரை உ.பி அரசு நேற்று சஸ்பெண்ட் செய்தது.