சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஜூன் முதல் வாரம் வரை வெவ்வேறு நாட்களில் நீதிபதிகளாக பதவியேற்ற ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பதவிவகித்து வருகின்றனர்.
அவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டுமென உச்ச நிதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து 5 நீதிபதிகளும் ஓரிரு நாட்களில் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.