சென்னை: நடிகை விஜயலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சீமான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்தார். வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை, 2012ம் ஆண்டிலேயே விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டார். கடிதத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டனர். ஆனால், வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சீமான் அளித்த மனு மீதான வழக்கு கடந்த 17ம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பு வாதத்தையும், விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்டு நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், ‘விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது’ என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
மேலும் ‘மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. எனவே தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியிருப்பது சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்த போது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. திரைத்துறை தொடர்பான சிக்கலில் இருந்த அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்துள்ளார்.
தன்னிடம் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது. எனவே இந்த வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது’ என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, சீமானுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழக போலீசார் பெங்களூர் சென்று நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். அப்போது சீமான் தன்னை மிரட்டியதால் தான் வழக்கை வாபஸ் பெற்றதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். நடிகை வாக்கு மூலத்தின் அடிப்படையில் சீமானிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விசாரணையில் உண்மை நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை பாயும். அதே நேரத்தில் நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு தரப்பு வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, “நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு எதிராக மொத்தம் 15 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளின் முடிவில் சீமான் குற்றவாளிதான் என போலீசார் முடிவு செய்துவிட்டால் அவர் கைது செய்யப்படுவது உறுதி. தற்போதைய நிலையில் விசாரணை நடத்தும் அதிகாரிகள் தான் சீமான் கைது குறித்து இறுதி முடிவு எடுக்கக் கூடியவர்கள்.
இந்த கைது நடவடிக்கை 12 வார விசாரணைக்கு நடுவிலும் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கு இல்லை” என்று கூறியுள்ளனர். மேலும் பலாத்கார வழக்கில் 6 ஆண்டுகள் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், சீமானுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்றன் பின் ஒருவராக வெளியேறி வருகின்றனர். இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நடிகை விஜயலட்சுமி விவகாரம் சீமானுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.