சென்னை: நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடியை மானநஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும் என நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு தடைவிதிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவலும் வாய்மொழியாகவோ, எழுத்து பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இடைக்கால மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அவதூறு வழக்கு விசாரணையின் போது சிங்கமுத்து தரப்பில் ஆஜராகி ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக ஒருதலைப்பட்ச தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய ஒருதலைப்பட்ச தடை உத்தரவை எதிர்த்து சிங்கமுத்து தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் வயதாகி விட்டதால் உடல்நல குறைவினால் சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் அந்த வழக்கில் பதில் உரை தாக்கல் செய்து வாதிடமுடியவில்லை என்றும் எனவே ஏற்கனவே விதிக்கப்பட்ட ஒருதலை உத்தரவை நீக்க வேண்டும் என கேட்டு கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.எஸ்.குமரேஷ் பாபு பிரதான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டார். இது தொடர்பாக சிங்கமுத்து தரப்பிற்கு ரூ.2500 அபராதம் விதித்து. அதே போன்று வடிவேலு தரப்பிற்கும் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து இந்த பிரதான வழக்கு மேலும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.