சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியம் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கத கிராமத் தொழில் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்தும் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: நடைமுறையில் உள்ள அறிவிப்புகளின் நன்மைகள் குறித்தும், நிலுவையில் உள்ள அறிவிப்புகளை விரைந்து முடித்திட வேண்டும். வாரிய பொருட்கள் தரமாக உள்ளதை கருத்தில் கொண்டு இதனை மக்களிடையே பிரபலப்படுத்தி விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறளக கட்டிடத்தினை அகற்றி புதிய நவீன பன்னடுக்கு கட்டிடமாக அறிவிக்கப்பட்டதை செயல்படுத்திட அனைத்து நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
புதிதாக பொறுபேற்றிருக்கும் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் வியாபார அபிவிருத்திற்கு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். அதனை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இந்த வாரியத்தில் தற்சமயம் குறைந்த பணியாளர்கள் பணியாற்றுவதை கருத்தில் கொண்டு பணியில் உள்ளோர்கள் சிரமமான சூழ்நிலை இருந்தாலும் அதனை நேர்மறையான அணுகுமுறை கையாண்டு வாரிய வருவாயை அதிகரிக்கக்கூடிய வகையில் பணியாற்றுங்கள். தீபாவளி போன்ற விழாக்காலங்களில் மக்களுக்கு தேவைப்படுவதை முன்னரே கண்டறிந்து, நவீன காலத்திற்கேற்றவாறு யுக்திகளை கையாண்டு தரமான பொருட்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.