சென்னை: தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சுமார் 56 ஆயிரம் சிம் கார்டுகளை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு ஸ்மார்ட் போனில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். சிலர் அதிக விலை கொடுத்து ஆவணம் இல்லாமல் சிம்கார்டு வாங்குகின்றனர், இந்நிலையில்,ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில்,தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை முடக்கும் நடவடிக்கையில் சைபர்கிரைம் காவல்துறை ஈடுப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் போலி ஆவணங்களை கொடுத்து சிம்கார்டு வாங்குவதுடன், விற்பனையாளர்களும் அனுமதியின்றி மற்றவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்கதையாக உள்ளது.
இது குறித்த ஆய்வில், ஒரே நபரின் பெயரில் 436 சிம்கார்டுகள், குழந்தை புகைப்படத்தை கொண்டு வாங்கியது என ஏராளமான விதிமீறல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,102 சிம்கார்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள போலீசார் சுமார் 56,000 சிம் கார்டுகளை முடக்க தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சைபர் கிரைம் தீவிரவாதம் போன்ற குற்றங்களுக்கு உட்படுத்தப்படும் அபாயமுள்ள இத்தகைய சிம்கார்டுகள் பெரும்பாலும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளில் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.