திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் (வயது 101). ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011வரை கேரள முதல்வராக செயல்பட்டுள்ளார். தற்போது வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார்; ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே இவருக்கு கடந்த 23ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற அச்சுதானந்தனின் உடல்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. பின்பு மீண்டும் உடல்நிலை சீராவதில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, இதய செயல்பாட்டை சீராக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளனர்.