Thursday, June 19, 2025
Home செய்திகள் ஏற்காடு சுற்றுலா சென்றபோது விபத்து; வேன் மீது ஆம்னி பஸ் மோதி தந்தை, மகன் உள்பட 5 பேர் பலி: 31 பேர் காயம்

ஏற்காடு சுற்றுலா சென்றபோது விபத்து; வேன் மீது ஆம்னி பஸ் மோதி தந்தை, மகன் உள்பட 5 பேர் பலி: 31 பேர் காயம்

by Neethimaan


கரூர்: ஏற்காடுக்கு சுற்றுலா சென்றபோது கரூர் அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதி தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த டூரிஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அருண் திருப்பதி (45) தலைமையில் 23 பேர் ஏற்காட்டுக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கரூர் வெண்ணெய்மலை செம்மடை ரவுண்டானா பகுதியில் பெங்களூரிலிருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து சாலை சென்டர் மீடியனில் ஏறி, எதிர்திசையில் சேலத்தை நோக்கி சென்ற சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. ஆம்னி பஸ் முன்பகுதி ெநாறுங்கி சேதமடைந்தது.

வேன், ஆம்னி பஸ்சில் வந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு, ஜன்னல் கண்ணாடியை திறந்து கொண்டு கீழே குதித்தனர். விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த டூரிஸ்ட் வேன் டிரைவர் சசிகுமார் (52), டூரிஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அருண் திருப்பதி (45), அவரது மகன் அசின்(10), எழில் தட்சையா(15) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்னி பஸ் டிரைவர் மற்றும் டிராக்டர் டிரைவர் முருகேசன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். வேன் மற்றும் பஸ்சில் பயணித்த 30 பேரும் காயமடைந்தனர். அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஹேமவர்ஷினி (20) இறந்தார்.

தகவலறிந்து வந்த கரூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் வெங்கமேடு போலீசார் விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் சேலம்-கரூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பைக் மீது லாரி மோதியதில் தோழியுடன் வாலிபர் சாவு
சேலம் இரும்பாலை தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார். சேலம் வடக்கு ஒன்றிய திமுக பொருளாளர். இவரது மகன் சாரதி (22). இவர் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். அதே கம்பெனியில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக மாணவர் அணி துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணனின் மகள் சாருபிரியாவும் (23) வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 5 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இருவரும் பணியில் இருந்தனர். இரவு பணியை முடித்துவிட்டு, கம்பெனி வாகனத்தில் வீட்டிற்கு சென்ற சாருபிரியா நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக கூறி சாரதியுடன் டூவீலரில் புறப்பட்டுள்ளார்.

இருவரும் திருவாகவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் அதிகாலை 3.50 மணிக்கு வந்தனர். அப்போது ரோட்டில் தண்ணீர் தேங்கி கிடந்துள்ளது. அதில் இறங்காமல் செல்வதற்காக டூவீலரை சற்று வளைத்துள்ளார். அப்போது லாரி ஒன்று டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாரதியும், சாருபிரியாவும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இருவரும், குடும்பத்திற்கு ஒரே குழந்தைகள் ஆவர். இதனால் இருவரது பெற்றோரும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi