சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு பிறகு தொழிற்சாலைகள், சிறுகுறு தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. இதற்கு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவற்றால் சுமார் 72 கூட்டமைப்பை சார்ந்த தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உச்சபட்ச மின்பயன்பாடு நேர கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இதனை அரசு எளிமையாகவோ, மென்மையாகவோ எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துப்பேசி, உச்சபட்ச நேர மின்பயன்பாட்டு உயர்வு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து, பொதுமக்கள், தொழில்துறையினர், சிறு வியாபாரிகள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் நிரந்தர மின் நிலைக்கட்டணம் 1 கிலோ வாட்டுக்கு 35 ரூபாயிலிருந்து 158ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 432 சதவீத நிலைக் கட்டண உயர்வு என்பது ஒவ்வொரு தொழிலகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.