வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் மையம் இயங்கி வருகிறது. இங்கு அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில், பல மாதங்களாக ஒரே பதிவெண்ணில் 2 வேன்களில் தினமும் சுமார் 2,500 லிட்டர் வீதம் பல லட்சம் லிட்டர் பால் நூதன முறையில் திருடப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் மெத்தனமாக இருந்ததாக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு ஆவின் நிறுவனம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘ஒரே பதிவெண் கொண்ட வாகனத்தை ஆவின் நிறுவனத்திற்குள் அனுமதித்தது எப்படி?, நிர்வாகம் சார்பில் பறிமுதல் செய்து ‘சீல்’ வைத்த வாகனத்தை வெளியே செல்ல அனுமதித்தது ஏன்?, பாதுகாப்பு குளறுபடிக்கான காரணம் என்ன? இவற்றுக்கு வரும் 12ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்’. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒரே பதிவெண் கொண்ட வாகனத்தில் பால் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் அவற்றின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.