சென்னை: பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக கண்டிப்பாக இடம் பெறும் என டி.டி.வி.தினகரன் கூறினார். வட சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உரிய நேரம் வரும்போது அமமுக அறிவிப்பை வெளியிடும். கோவையில் வருகிற 21ம் தேதி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைத்துள்ளோம். பெருமழை பெய்தால் கூட சென்னையில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதை அவர்கள் முறையாக செய்ய வேண்டும். விடியலை கொண்டு வருவோம் என கூறுகிறார்கள்.
ஆனால் இவர்களால் விடியலை கொண்டு வர முடியவில்லை. அமமுக ஆட்சிக்கு வரும்போது விடியல் கண்டிப்பாக வரும். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளில் குறை சொல்ல முடியாது. ஆகவே, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தரவில்லை. எந்த திரைப்படத்துக்கும் அரசு நெருக்கடி தரக்கூடாது, அதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்வது ஜனநாயக நாட்டில் மக்கள் கையில் தான் உள்ளது.