Friday, June 20, 2025
Home செய்திகள்Showinpage பாஜக, காங்கிரஸ் இடையே மறைமுக உறவு ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஆம்ஆத்மி: அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிட முடிவு

பாஜக, காங்கிரஸ் இடையே மறைமுக உறவு ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஆம்ஆத்மி: அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிட முடிவு

by Arun Kumar

புதுடெல்லி: பாஜகவும், காங்கிரசும் மறைமுக உறவில் இருப்பதாக கூறி, ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து ஆம்ஆத்மி வெளியேறியது. இனிமேல் அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டியுள்ளதால், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கோரி, ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதின. ஆனால் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை.

அதனால் ஆம்ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆம் ஆத்மி கட்சி, ‘இந்தியா’ கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது. இனிமேல் ஆம்ஆத்மி கட்சி தனித்து செயல்பட முடிவு செய்துள்ளது. இந்த முடிவு கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பாஜகவும், காங்கிரஸும் தான் மறைமுகமாக இணைந்து செயல்படுகின்றன.

இக்கட்சிகள் மறைமுக கூட்டணியில் உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே, இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்டது’ என்று ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அனுராக் தண்டா வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜகவும் காங்கிரஸும் மறைமுகமாக இணைந்து செயல்படுகின்றன.

பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக பயனளிக்கும் விஷயங்களை மட்டுமே ராகுல் காந்தி பேசுகிறார். அதற்கு பதிலாக, சோனியா காந்தி குடும்பத்தை சிறையில் இருந்து மோடி காப்பாற்றுகிறார். பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்குவதில் இரு கட்சிகளுக்கும் ஆர்வம் இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு 240 இடங்களைப் பெற உதவியதில் ஆம் ஆத்மி முக்கிய பங்கு வகித்தது.

ஆனால் இனி வரும் அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். நாட்டின் நலனுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளை ஆதரிக்கும்’ என்றும் அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi