மாதவரம்: வேப்பேரியை சேர்ந்தவர் பிரேம்குமார் (34). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவருக்கும் தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமதி, பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர் கபில் ஆகியோருக்கு இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது பிரேம்குமார், சுமதியை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமதி தனது உறவினரான சென்னை மேற்கு மாவட்ட பாஜ நிர்வாகி விஜய் நாராயணனை தொடர்பு கொண்டு அழுதுள்ளார். உடனே, விஜய் நாராயணன் தனது நண்பர்களான கண்ணதாசன், ஜீவா, தீனா ஆகியோருடன் அங்கு வந்து, பிரேம் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
அப்போது அதை தடுக்க வந்த கபிலையும் வெட்டி விட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் பிரேம்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கபில் லேசான காயங்களுடன் தப்பினர். தகவலறிந்த வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேம்குமாரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பேரி போலீசார் சுமதி மற்றும் பாஜ நிர்வாகி விஜய் நாராயணன் உட்பட 5 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.