சென்னை: ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரண்டாம் கட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு 24.04.2023 வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
இதன் 100-வது நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 24.04.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பரப்புரைத் திட்டம் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டு வருகின்றன. குறைந்தபட்சம் 1.5 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்தி முடிக்க செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, ‘நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில் அமைக்கப்படுகின்றன.
இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி ‘தமிழ்ப் பெருமிதம்’ ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பரப்புரையின் தொடர்ச்சியாக சென்னை, செயின்ட் ஆனிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ‘துணிந்து செல்’ என்னும் பொருண்மையில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா கருத்துகளை எடுத்துரைத்தார். தமிழ் இணையக் கல்விக்கழக இணை இயக்குநர் ரெ.கோமகன் திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். செயின்ட் ஆனிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இ. அன்னம்மாள் அற்புதமேரி நன்றியுரை வழங்கினார். மேற்கண்ட நிகழ்வில் ஏறத்தாழ 600 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
‘தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாரட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டன. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பெறவுள்ளன.