தென்காசி: தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அருகே தாயார்தோப்பைச் சேர்ந்தவர் ஆமோஸ் (26). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (23). 2 வயது பெண் குழந்தை உள்ளது. உள்ளார். குடும்பத்துடன் கடையம் அருகேயுள்ள நாலாங்கட்டளையில் ஆமோஸ் வசித்து வந்தார். தன்னிடம் செல்போன் இல்லாததால் உடன் பணிபுரிபவர்கள், உறவினர்கள் அவரது மனைவி நந்தினி போனில் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆமோசுடன் வேலை பார்த்த முக்கூடல் அருகே சிங்கம்பாறையைச் சேர்ந்த அந்தோனி டேனிஸ் என்ற டேனி (35), அடிக்கடி நந்தினி செல்போனில் பேசி வந்துள்ளார். இதில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆமோஸ் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் சுற்றி வந்ததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்தோனியுடன் பழகுவதை கைவிடுமாறு ஆமோஸ் மனைவியை எச்சரித்துள்ளார்.
அந்தோனிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் அவர் நந்தினியை தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று மதியம் 12 மணியளவில் பைக்கில் ஆமோஸ் வீட்டிற்கு வந்து நந்தினியை அழைத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ஆமோஸ், எனது மனைவியை நீ எப்படி கூப்பிடலாம் எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். நந்தினியை அந்தோனியுடன் செல்ல விடாமல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோனி அரிவாளால் ஆமோசை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில் ஆமோஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்முன்னே கணவரை வெட்டியதை பார்த்தும் நந்தினி தடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்தோனி டேனிசையையும், நந்தினியையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.