பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் 3 நாளில் முடிவு எடுப்பார்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
2021-01-22@ 00:23:56

புதுடெல்லி: பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று உறுதியாக தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில கவர்னருக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலுல் இதுகுறித்து முதலாவதாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கூட ஜனாதிபதி கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, வழக்கில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து முதலாவதாக வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐக்கு கடும் கண்டனம் விதித்ததோடு, இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஏன் தாமதம் செய்கிறார் என சரமாரி கேள்வியெழுப்பி இருந்தது. இதையடுத்து மேற்கண்ட வழக்கானது நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஜனாதிபதி தான் இறுதி முடிவை எடுப்பார். அவருக்கு தான் உட்சபட்ச அதிகாரம் உள்ளது. அதனால் அவரை நீதிமன்றம் விடுவிக்கும் விதமாக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதற்கு பேரறிவாளன் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தாமாக முன்வந்து நீதிபதிகள் முன்னிலையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதில், ”நான் ஆளுநர் தரப்பில் வாதங்களை முன்வைக்க உள்ளேன். இதில் அவர் தற்போது ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில்,” தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிவாளன் உட்பட ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுத்து அதனை அறிவிப்பார். இதுகுறித்து மத்திய அரசிடமும் அவர் விளக்கியுள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோபால் சங்கர நாராயணன் மற்றும் பிரபு ஆகியோர் வாதத்தில், ”இதனை தான் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வாதங்களாக முன்வைத்து வருகிறோம்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் இருந்தும் அவர் பேரறிவாளனின் கருணை மனு மற்றும் தமிழக சட்டப்பேரவை தீர்மானம் ஆகியவற்றை நீண்ட காலமாக நிலுவையில் வைத்து ஏன் காலதாமதம் செய்கிறார் என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்கிறது. இருப்பினும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுக்கிறார் என்றால், அதுகுறித்த வாதங்களை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை அடுத்த நான்கு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதில் முதலாவதாக இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தான் உள்ளது என தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தற்போது தனது நிலைப்பாட்டை அதிரடியாக மாற்றிக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் செய்திகள்
லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
கொரோனா பரவல் மீண்டும் உச்சம்; ஒரே நாளில் நாடு முழுவதும் 18,711 பேருக்கு தொற்று உறுதி: மக்கள் அச்சம்..!
நாளை சர்வதேச பெண்கள் தினம்: எதைப்பற்றியெல்லாம் பெண்கள் ட்வீட்டரில் பதிவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்
தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடி படத்தை நீக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
பெற்றோரை பிரிய மனமின்றி அழுத மணப்பெண் பலி
கன்னியாகுமரி எம்பி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி