தமிழக காங்கிரசில் கோஷ்டி மோதல் உச்சகட்டம் விரைவில் தனிக்கட்சி தொடங்குகிறார் கார்த்தி சிதம்பரம்
2015-02-03@ 00:25:30

சென்னை : தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தனிக்கட்சி தொடங்குவது குறித்து கார்த்தி சிதம்பரம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். தமிழக காங்கிரசில் இளங்கோவனுக்கும், ப.சிதம்பரம் தரப்புக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் மேலிடத்தில் புகார் செய்து வருவதால் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் இப்பிரச்னையில் தலையிட உள்ளனர். மேலிட முக்கிய தலைவர்களுக்கும் தமிழக காங்கிரசின் கோஷ்டி பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ்.இளங்கோவனை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து கொண்டு முக்கிய தலைவர்களை அணுகி வருகிறார். ஆனாலும் எதற்கும் சற்றும் அசைந்து கொடுக்காத ஈவிகேஎஸ்.இளங்கோவனோ, ப.சிதம்பரம் எடுக்கும் எந்த முயற்சியாக இருந்தாலும் அதற்கு உடனடியாக பதிலடி கொடுத்து வருவது காங்கிரசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகமது படேல் ஆகியோரை சந்தித்து ப.சிதம்பரம் தனது மனக்குறைகளை கொட்டி தீர்த்துள்ளார்.
தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை கட்சியை விட்டு நீக்குவது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது முதல், கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை என்று திட்டியது வரை விலாவாரியாக எடுத்து சொல்லியுள்ளார். மேலும் ஜெயந்தி நடராஜன் விலகியபோது வெளியிட்ட அறிக்கையில், ‘இன்னொருவர் தனது வாரிசோடு சென்றுவிட்டால் கட்சி தூய்மையாகிவிடும்’ என்று தன்னைத் தான் சுட்டிகாட்டியுள்ளதாக ப.சிதம்பரம் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையும் மீறி கட்சியில் இருக்க வேண்டுமா என்பதை நீங்களே கூறுங்கள் என்று அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சோனியா வரை இந்த விவகாரம் சென்றதை தொடர்ந்து அவர், ஈவிகேஎஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, ‘ப.சிதம்பரத்தை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும், பொதுவாகவே சொன்னேன்’ என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் தொலைபேசி மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியடைந்த கார்த்தி சிதம்பரம், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க மீண்டும் சென்னையில் நேற்று தனிக்கூட்டத்தை கூட்டினார். தமிழகம் முழுவதும் இருந்து அவரது ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மத்தியில் காங்கிரஸ் மேலிடத்தின் அணுகுமுறை குறித்தும், தனிக்கட்சி தொடங்கலாமா என்பது குறித்தும் விரிவாக கார்த்தி சிதம்பரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ப.சிதம்பரத்துக்கு தராவிட்டால் உடனடியாக கட்சியை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்குவோம் என்று மேலிடத்துக்கு கெடு விதித்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் தனிக்கூட்டம் கூட்டி தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருப்பது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் ப.சிதம்பரத்தின் அணுகுமுறை வேறுமாதிரி செல்வதால் அவரை சமாதானப்படுத்தும் வகையில், மாநில தலைவர் பதவி எல்லாம் தரமுடியாது. அதற்கு பதிலாக தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான காமராஜர் அறக்கட்டளையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவியில் ப.சிதம்பரத்தை மேலிடம் நியமித்துள்ளது.
இதற்கெல்லாம் ப.சிதம்பரம் தரப்பு சமாதானம் ஆகுமா அல்லது மீண்டும் தனிக்கட்சி ஒன்று தமிழகத்தில் உதயமாகுமா என்பது அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் கார்த்தி சிதம்பரம் தனியாக கூட்டத்தை கூட்டியுள்ளது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தொலைபேசி மூலம் கூறுகையில், ‘‘டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறேன். கார்த்தி சிதம்பரம் மீண்டும் தனிக்கூட்டம் கூட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்போம். என்னை பற்றி கேவலமாக சித்தரித்து ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளதாகவும் கூறினர். போஸ்டரில் எனது பெயர் பெரிதாகத்தான் உள்ளது. அரசியல் என்று வந்தால் கழுத்தில் பூமாலையும் விழும். செருப்பு மாலையும் விழும். தனிக்கூட்டத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பின்பு எனது பதிலை சொல்கிறேன் என்றார்.
இளங்கோவன் அரவணைத்து செயல்பட வேண்டும்: கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை
கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்பிக்கள் வள்ளல் பெருமாள், அழகிரி, முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, கந்தசாமி, சுந்தரம், விஜயக்குமார், கோவை செல்வராஜ் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் 20 பேர் மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 8 மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் 5 பேர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்மையில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மூலமாக வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் ஆகியவை மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் எங்களுடைய உழைப்பையும், பங்களிப்பையும் தருவதற்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக உள்ளோம். கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரையும் கலந்து அரவணைத்து கட்சியின் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டு கொள்கிறோம்.
சிதம்பரம் அணி உடைந்தது?
ப.சிதம்பரம் அணியில் கார்த்தி சிதம்பரத்துக்கு இணையாக தென்சென்னை மாவட்ட தலைவராக உள்ள கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏவும், எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகையும் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர். அதில், செல்வப்பெருந்தகை எஸ்சி பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்பட்டபின், அந்தப் பிரிவின் தேசிய தலைவரின் அறிவுரைப்படியே செயல்படுகிறார். இதனால் ப.சிதம்பரத்துடன் நெருக்கம் காட்டுவதை தவிர்த்து வருகிறார். இன்று கார்த்தி சிதம்பரம் நடத்திய ஆதரவாளர்கள் கூட்டத்திலும் செல்வப்பெருந்தகை கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். கடந்த வாரம் எஸ்சி/எஸ்டி கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தை நடத்த கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி கூட்டம் நடத்தி, இளங்கோவனை சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளார். இப்போது கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதால், சிதம்பரம் அணி உடைந்துள்ளது.
சிதம்பரத்துக்கு பதவி
ப.சிதம்பரம் தனது மேலிட செல்வாக்கை பயன்படுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு தர வேண்டும் என்று கெடு விதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் காமராஜர் அறக்கட்டளையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவி ப.சிதம்பரத்துக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. அவரை சமாதானப்படுத்தவே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது: சண்முகம் புரியாமல் பேசுவதாக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு
அதிமுக ஆபீஸ்களில் ஓபிஎஸ் படம் அகற்றம் நாகையில் இபிஎஸ் உருவபொம்மை எரிப்பு
காவல்துறை புகார் ஆணையம் குறித்த மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும்: கமல்ஹாசன் தகவல்
ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது: கோவை செல்வராஜ் பேட்டி
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பு மனுதாக்கல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!