Saturday, June 14, 2025
Home மாவட்டம்மதுரை 99 சதவீத பணிகள் முடிந்தும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் திறக்கப்படுவதில் சிக்கல்

99 சதவீத பணிகள் முடிந்தும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் திறக்கப்படுவதில் சிக்கல்

by Suresh

மதுரை, மே 29: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்திற்கான 99 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இருப்பினும் அதனை திறக்காததால் வணிகர்களுடன், மாநகராட்சிக்கும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளது. மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட்டுடன், அருகில் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டும் செயல்பட்டு வந்தது. இந்த இரு பஸ் ஸ்டாண்ட்களும் இடிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவானது. இதன்பேரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.174 கோடியில் பஸ் ஸ்டாண்டுடன் இணைந்த 474 கடைகள் கொண்ட வணிக வளாகமும் கட்டப்பட்டுள்ளது. இங்கு 100க்கும் அதிக கார்கள் நிறுத்தும் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் வசதியும் அமைக்கப் பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட போதும், வணிக வளாகக் கடைகள் முடித்து ஏலம்விட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது ஆண்டுக்கு ரூ.7 கோடி வரை மதுரை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் கடைகள் ஏலம் விட்டு திறக்காதது, மாநகராட்சிக்கான வருவாயை மட்டுமல்லாது, வணிகர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

* இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தின் உயரத்திற்கும் மேல் கட்டிடம் இருக்கக் கூடாது என்ற விதிமுறை காரணத்தால், துவக்கத்திலேயே இந்த வணிக வளாகத்திற்கான கட்டிட வரைபட அனுமதி வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, பிறகு அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஒப்பந்ததாரர் பணி குறைபாடு காரணத்தால் வணிக வளாக பணிகளை முடிப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இங்குள்ள நூற்றுக்கணக்கான கடைகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வருகை இருக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.

இதற்கு மாநகராட்சி தரப்பில் முறையான விண்ணப்பித்தும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், வணிக வளாகப்பணிகள் 99 சதவீதம் முடிந்தும் திறக்க முடியாத நிலை இருக்கிறது. ஜூன் மாத இறுதிக்குள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ன. தீயணைப்புத் துறை அனுமதி உள்ளிட்ட சில அனுமதிகளுடன், சிறு கட்டிடப் பணிகளே மீதமிருக்கிறது. பணிகள் முடிந்ததும் கடைகள் ஒதுக்கீடு பழைய வளாகத்தில் செயல்பட்ட வணிகர்களுக்கு வழங்கியது போக, மீதமுள்ளவை டெண்டர் மூலம் பிறருக்கு வழங்கப்படும்’ என்றனர்.

* வணிகர்கள் கூறும்போது, ‘மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் கடை ஒதுக்கீட்டிற்காக ஐந்து ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். இதனால் நூற்றுக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வளாகத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வணிக வளாகம் திறக்கப்பட்டால், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தற்போதுள்ள பார்க்கிங் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்’ என்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi