பூந்தமல்லி: போரூர், உதயா நகர் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(55). கடந்த வாரம் இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றார். அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரனை மர்ம் நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, வில்லிவாக்கத்தை சேர்ந்த சூர்யா(எ) கில்லிசூர்யா(32), தாமஸ்(24), வக்கீல் வினோத்(35), ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்டு வந்த சூர்யா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்ததும், இந்தத் கொள்ளை சம்பவத்திற்கு சூர்யாவின் நண்பரான தாமஸ் உதவியாக இருந்ததும், கைரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளை அணிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், கொள்ளை அடித்த நகைகளை சூர்யா அவரது நண்பரான வக்கீல் வினோத் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் இருந்து போலீசார் 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.