திருமலை: ஐதராபாத்தில் நள்ளிரவில் பூஜை நடத்தி 8 வயது சிறுவனை கொடூரமாக கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் உடல் வீசப்பட்டது. இது தொடர்பாக திருநங்கையை கைது செய்தனர். ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். ஐதராபாத் சனத்நகர் அலாவுதீன் கோடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் வாஹித் (8). 4ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தொழுகைக்காக வெளியே சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கம், உறவினர் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அங்குள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த திருநங்கை இம்ரான் என்பவர், அப்துல் வாஹித்தை அழைத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து ஐதராபாத் போலீசில் அப்துல் வாஹித்தின் பெற்றோர் புகார் செய்தனர். அப்துல் வாஹித்தை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நள்ளிரவு, திருநங்கை இம்ரானின் வீட்டில் பூஜைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். திருநங்கை இம்ரான் தப்பியோடி விட்டாராம். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம், தேங்காய் போன்றவற்றை வைத்து பூஜை செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கால்வாயில் ஒரு மூட்டை கிடந்ததை பொதுமக்கள் பார்த்தனர். அதை பிரித்து பார்த்தபோது, அப்துல் வாஹித் சடலமாக கிடந்தது தெரியவந்தது. சிறுவனின் மரணத்திற்கு திருநங்கைதான் காரணம் என கூறி அவரது வீட்டை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்துல் வாஹித்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் உதவி ஆணையர் சீனிவாச ராவ் கூறுகையில், ‘இம்ரான் என்ற திருநங்கை, சிறுவனை விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுவனை கொன்று உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி பக்கெட்டில் போட்டுள்ளார். பின்னர் அந்த பக்கெட்டை சாக்கு மூட்டையில் கட்டி, ஆட்டோ டிரைவரின் உதவியுடன் கால்வாயில் வீசி சென்றுள்ளார். சிறுவன் அப்துல் வாஹித் நரபலி கொடுக்கப்படவில்லை, பண தகராறு காரணமாக கொலை நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது’ என்றார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான திருநங்கை இம்ரானை இன்று அதிகாலை கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். அவருக்கு உதவி செய்த ஆட்டோ டிரைவரையும் தேடி வருகின்றனர்.