Tuesday, May 20, 2025
Home செய்திகள் நாங்குநேரி அருகே கிணற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி

நாங்குநேரி அருகே கிணற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி

by Lakshmipathi

*நண்பர்களோடு குளிக்கச் சென்றபோது பரிதாபம்

களக்காடு : நாங்குநேரி அருகே நண்பர்களோடு குளிக்கச் சென்ற 8 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த உன்னங்குளம் அருகே உள்ள தெற்கு இளையார்குளம், வடக்கு தெருவைச் சேர்ந்த சடையன் (36).

இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் சுபனேஷ் (8) மணிமுத்தாறு அருகே உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையையொட்டி சிறுவன் சுபனேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் அங்குள்ள கிணற்றிற்கு குளிக்கச் சென்றார். சமீபத்தில் பெய்த மழையால் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இதனால் சிறுவர்கள் அந்த கிணற்றில் ஆனந்தமாக குளித்தனர். அரைகுறையாக நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டதாகக் கூறப்படும் சுபனேஷ் நண்பர்கள் குளிப்பதைப் பார்த்து அவரும் கிணற்றிற்குள் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவர் கிணற்று நீரில் தத்தளித்ததால் அங்கிருந்த சிறுவர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அந்த கிணறு சுமார் 60 அடி ஆழம் கொண்டது என்பதால் பொதுமக்கள் போலீசாரிடம் உதவி கேட்டு அழைத்தனர்.

இதையடுத்து போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் நாங்குநேரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால் மீட்பு நடவடிக்கைக்கு தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளி வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் முத்துக்குளி வீரர்கள் சிறுவன் சுபனேஷின் உடலை மீட்டனர். சிறுவனின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது கண் கலங்க வைத்தது. இச்சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi